உலக கோப்பையை வெல்வது யார்? இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு நடக்கிறது.
உலக கோப்பையை வெல்லப்போவது இந்தியாவா? ஆஸ்திரேலியாவா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.
இந்திய அணி 4-வது முறையாகவும், ஆஸ்திரேலியா 8-வது தடவையாகவும் இறுதிப் போட்டியில் விளை யாடுகிறது. இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவது இது 2-வது முறையாகும். 2003-ம் ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா 125 ரன் வித்தியாசத்தில் வென்றது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் இந்திய அணி முதல் முறையாக உலக கோப்பையை வென்றது. பின்னர் 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையில் 2-வது தடவையாக உலக கோப்பை 2011-ம் ஆண்டில் கிடைத்தது. தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 3-வது முறையாக உலக கோப்பையை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் தூர்தர்ஷன் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.
வானிலை எப்படியிருக்கும்?
அகமதாபாத்: வானிலையை பொறுத்தவரை மழை ஆபத்து இல்லை. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட அதே ஆடுகளம் தான் இறுதிப்போட்டிக்கும் பயன்படுத்தப்படுகிறது. அந்த ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 191 ரன்னில் சுருட்டி அதை 30.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இந்திய தரப்பில் ஐந்து பவுலர்கள் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அதற்காக இதுவும் குறைந்த ஸ்கோர் ஆட்டமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆடுகளத்தன்மை மெதுவாக இருக்கும் என்பது கேப்டன் ரோகித் சர்மாவின் கணிப்பு. பேட்டிங், சுழல் இரண்டுக்கும் ஒத்துழைக்கும் என்று தெரிகிறது.
இரவில் பனியின் தாக்கம் முக்கிய பங்கு வகிக்கும். அதனால் ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங் செய்வது குறித்து பரிசீலிக்கலாம். 50 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி 3 இறுதிப்போட்டியிலும், 20 ஓவர் உலகக் கோப்பையில் கடைசி 4 இறுதி ஆட்டத்திலும் 2-வது பேட்டிங் செய்த அணிகளே வாகை சூடியது நினைவு கூரத்தக்கது.
இந்தியா
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் லீக்கில் இருந்து அரைஇறுதி வரை தொடர்ச்சியாக 10 ஆட்டங்களிலும் வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக இறுதிப்போட்டிக்கு வந்திருக்கிறது.
கேப்டன் ரோகித் சர்மாவின் (10 ஆட்டத்தில் 62 பவுண்டரி, 28 சிக்சருடன் 550 ரன்) சரவெடியான தொடக்கமும், விராட் கோலி (3 சதம், 5 அரைசதம் உள்பட 711 ரன்), ஸ்ரேயாஸ் அய்யர் (526 ரன்), லோகேஷ் ராகுல் (386 ரன்), சுப்மன் கில் (350 ரன்) ஆகியோரின் ரன்வேட்டையும் இந்தியாவின் வீறுநடைக்கு அச்சாரமாக அமைந்துள்ளது.
இதே போல் பந்துவீச்சில் முகமது ஷமி (23 விக்கெட்), பும்ரா (18 ), முகமது சிராஜ் (13), ரவீந்திர ஜடேஜா (16) குல்தீப் யாதவ் (15) அமர்க்களப்படுத்தியுள்ளனர். குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் 7 விக்கெட்டுகளை அள்ளிய முகமது ஷமியின் ‘ஸ்விங்’ தாக்குதல் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அவர் இடக்கை பேட்ஸ்மேன்களை மட்டும் 8 முறை காலி செய்திருக்கிறார். அதனால் நிச்சயம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்
ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களால் மைதானமே நீலநிறமாக கடல் போல் காட்சியளிக்க போகிறது. அவர்களது ஆர்ப்பரிப்பும், ஆதரவும் இந்திய அணியினருக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும்.
சொந்த மண்ணில் விளையாடுவது இன்னொரு சாதகமான அம்சமாகும். அதே நேரத்தில் நெருக்கடி வளையமும் வீரர்களை சுற்றி வளைத்து நிற்கும். அதை திறம்பட சமாளிப்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஹேசில்வுட்டும், மிட்செல் ஸ்டார்க்கும் துல்லியமான தாக்குதல் தொடுப்பதில் வல்லவர்கள். ஒரு நாள் போட்டியில் ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் மட்டும் கோலி 5 முறை ஆட்டமிழந்திருக்கிறார். இவர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி விட்டால் நமது கை ஓங்கி விடும்.
ஏற்கனவே லீக்கில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை அடக்கியுள்ள இந்திய அணியினர் வலிமையான நம்பிக்கையுடன் விளையாடுவார்கள். கடந்த ஜூன் மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும், 2003-ம் ஆண்டு உலகக்கோப்பையிலும் இந்திய அணி இதே ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை கோட்டை விட்டது. அதற்கு எல்லாம் பதிலடி கொடுக்க இதைவிட சரியான சந்தர்ப்பம் கிடைக்காது.
ஒரு நாள் போட்டியில் 50-வது சதம் அடித்து உலக சாதனை படைத்த விராட் கோலி, உலகக் கோப்பை இறுதிஆட்டத்தில் இந்தியர்கள் சதம் அடித்ததில்லை என்ற குறையை போக்குவாரா? என்ற ஆவலும் போட்டியின் மீதான ஈர்ப்பை அதிகரித்துள்ளது. 1983-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலும், 2011-ம் ஆண்டு டோனி தலைமையிலும் இந்திய அணி உலகக் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அந்த வரிசையில் ரோகித் சர்மாவும் இணைவாரா? என்பதே ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.
ஆஸ்திரேலியா
பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் இரு லீக்கில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் அடிவாங்கியது. அதன் பிறகு எழுச்சி பெற்ற ஆஸ்திரேலியா தொடர்ச்சியாக 8 ஆட்டங்களில் வென்று 8-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் கால்பதித்தது. ஏற்கனவே 5 முறை உலகக் கோப்பையை வென்று இருக்கும் ஆஸ்திரேலியா அந்த எண்ணிக்கையை 6-ஆக உயர்த்த வரிந்துகட்டுகிறது.
டிராவிஸ் ஹெட் காயத்தில் இருந்து குணமடைந்து இணைந்த பிறகு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை வலுவடைந்துள்ளது. டேவிட் வார்னர் (2 சதத்துடன் 528 ரன்), டிராவிஸ் ஹெட் (5 ஆட்டத்தில் 192 ரன்), மிட்செல் மார்ஷ் (2 சதத்துடன் 426 ரன்) சூப்பர் பார்மில் உள்ளனர். ஸ்டீவன் சுமித், லபுஸ்சேனிடம் இருந்து இன்னும் பெரிய இன்னிங்ஸ் வெளிப்படவில்லை. என்றாலும் அவர்கள் அபாயகரமானவர்களே. ஆல்-ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் நிலைத்து நின்று விட்டால், எதிரணி பந்துவீச்சை பிரித்து மேய்ந்து விடுவார். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தசைப்பிடிப்போடு விளையாடி இரட்டை சதம் விளாசி வரலாறு படைத்ததை மறந்து விட முடியாது.
பந்துவீச்சில் ஹேசில்வுட் (14 விக்கெட்), மிட்செல் ஸ்டார்க் (13 விக்கெட்), சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா (22 விக்கெட்) அசத்துகிறார்கள். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அழுத்தமான சூழலை அருமையாக கையாளக்கூடியவர்கள். அது மட்டுமின்றி குறைந்த ஸ்கோர் எடுத்தாலும் அதை வைத்து கடைசி பந்துவரை நம்பிக்கை இழக்காமல் போராடுவார்கள். இது தான் அவர்களின் பலமே.
எனவே இந்தியாவுக்கு எல்லா வகையிலும் கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. அதனால் யாருக்கு வெற்றி கிட்டும் என்று ஆரூடம் சொல்வது கடினம். ஆனால் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் முதல் 10 ஓவர்களில் எந்த அணி ஆதிக்கம் செலுத்துகிறதோ அவர்களுக்கே கோப்பையை தூக்கிப்பிடிக்கும் வாய்ப்பு அதிகம்.
பந்துவீச்சு ஒரு பார்வை…
பந்து வீச்சைப் பொருத்தவரை
இந்திய அணி மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் சகிதம் கடந்த ஆறு போட்டிகளாக களம் கண்டு வெற்றி அடைந்து வருகிறது. ஆஸ்திரேலியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் மூன்று சுழல் பந்து வீச்சாளர்களுடன் களம் கண்டு வெற்றி அடைந்து வருகிறது.
இந்திய பவுலிங் யூனிட் இதுவரை ஆடியுள்ள பத்து போட்டிகளில் எட்டு முறை எதிரணியை ஆல் அவுட் செய்துள்ளது. ஆஸ்திரேலியா பவுலிங் யூனிட் – ஐந்து முறை ஆல் அவுட் செய்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக எதிரணிகளில் வீழ்ந்த மொத்த விக்கெட்டுகள் – 96 ஆஸி அணிக்கு எதிராக எதிரணிகளில் வீழ்ந்த மொத்த விக்கெட்டுகள் – 83
ஒரு பவுலர் ஒரு ஓவர் வீசினால் எவ்வளவு ரன்கள் விட்டுக் கொடுப்பார் என்பது எகானமி ஆகும். இந்திய பவுலர்களின் எகானமி & வீழ்த்தியுள்ள விக்கெட்டுகள்
பும்ரா 3.85 – 18வி சிராஜ் 5.32 – 13 வி ஷமி 4.87 – 23
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை மொத்தமாகச் சேர்த்து 54 விக்கெட்டுகள் ( 56.25% பங்களிப்பு) வீழ்த்தியுள்ளனர் கூடவே பத்து அணிகளிலும் குறைவான எகானமி 4.65 இல் பந்து வீசிவருகின்றனர். குல்தீப் – 3.925 – 15 விக்கெட்டுகள் ஜடேஜா – 3.6 – 16 விக்கெட்டுகள் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் இதுவரை மொத்தமாக சேர்த்து 31 விக்கெட்டுகள் ( 32.3% பங்களிப்பு) வீழ்த்தியுள்ளனர் கூடவே 3.76 எனும் குறைவான எகானமி ரேட்டையும் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய பவுலர்களின் எகானமி & வீழ்த்தியுள்ள விக்கெட்டுகள் ஸ்டார்க் 6.14 – 13 வி ஹேசில்வுட் 4.616 – 14 வி பேட் கம்மின்ஸ் 5.90 – 13 வி ஆஸி அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இதுவரை மொத்தமாகச் சேர்த்து 40 விக்கெட்டுகள் ( 48.19% பங்களிப்பு) வீழ்த்தியுள்ளனர் எகானமி 5.55 இல் பந்து வீசிவருகின்றனர். இந்திய வேகப்பந்து வீச்சை விட அதிக ரன்களைக் கொடுத்து குறைவான விக்கெட்டுகளை அவர்கள் எடுத்துள்ளது புலப்படுகிறது
சுழல் பந்தைப் பொருத்தவரை ஜாம்பா – 5.37 – 22 விக்கெட்டுகள் மேக்ஸ்வெல் – 4.92 – 5 விக்கெட்டுகள் ஹெட் – 5.07 – 2 விக்கெட்டுகள் ஆஸி அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் இதுவரை மொத்தமாக சேர்த்து 29 விக்கெட்டுகள் ( 34.93% பங்களிப்பு) வீழ்த்தியுள்ளனர் கூடவே 5.12 எனும் எகானமி ரேட்டையும் கொண்டுள்ளனர்.
இதுவும் இந்திய சுழல் பந்து வீச்சாளர்கள்களை விட கூடுதல் எகானமி ஆகும். இந்திய பந்து வீச்சு யூனிட்டின் ஒட்டுமொத்த எகானமி 4.3 ஆஸி பந்து வீச்சு யூனிட்டின் ஒட்டுமொத்த எகானமி 5.33
உலக கோப்பையை இந்தியா வெல்ல ரோகித் இதை செய்யனும்… மற்ற வீரர்களுக்கும் யுவராஜ் சிங் எச்சரிக்கை…
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா ஒரு விஷயத்தை கண்டிப்பாக செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் அறிவுரை வழங்கி இருக்கிறார்.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்ல யுவராஜ் சிங் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் ரன் மற்றும் பவுலிங்கில்விக்கெட்களை வீழ்த்தி யுவராஜ் சிங் ஆட்ட நாயன் விருதை வென்றிருக்கிறார்.
இந்த நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு யுவராஜ் சிங் அளித்துள்ள பேட்டியில் ரோகித் சர்மா இந்த தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். அவர் ஒரு 40 பந்துகளை எதிர்கொண்டால் நிச்சயம் 70 முதல் 80 ரன்கள் குவித்து விடுவார். இதேபோன்று ரோகித் சர்மா 100 பந்துகளை எதிர்கொண்டால் இரட்டை சதம் அடிக்ககூட வாய்ப்பு இருக்கிறது. ரோகித் சர்மா ஒரு அணியின் வீரராக திகழ்கிறார். அணிக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே செய்கிறார். ரோகித் சர்மாவுக்கு அணி தான் முதலில் வருகிறது. இதனால் தான் அவர் ஒரு கேப்டனாக வெற்றிகரமாக திகழ்கிறார். அதுவும் வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் ரோகித் சர்மா ஒரு சாம்பியன். மேலும் ரோகித் சர்மா நெருக்கடியான கட்டத்தில் ஒரு நல்ல கேப்டனாக திகழ்கிறார். அவர் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் நிறைய அனுபவங்களையும் பெற்றிருக்கிறார். இந்த தொடர் முழுவதும் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு காரணம் நாம் எந்த ஒரு மிகப்பெரிய தவறையும் இந்த தொடரில் செய்யவில்லை. இதே போல் இறுதி ஆட்டத்திலும் இந்திய அணி எந்த ஒரு தவறையும் செய்யக்கூடாது. அப்படி செய்தால் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய வாய்ப்பு இருக்கிறது. நாளை எந்த ஒரு துரதிர்ஷ்ட சம்பவம் நடக்கக்கூடாது என்று நான் நம்புகிறேன்.
இந்திய அணி நம்பிக்கையிலும் உத்வேகத்திலும் நன்றாக இருக்கிறார்கள். அனைவரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். ஆனால் பிரச்சனையே இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது என்பதுதான். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எப்படி அழுத்தத்தை கையாள வேண்டும் என்று நன்றாக தெரியும். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கூட கம்மின்ஸ் மற்றும் ஸ்டார்க் பேட்டிங் செய்யும்போது எப்படி நெருக்கடியை சமாளித்து பெரிய சாட் எதுவுமே விளையாடாமல் சிங்கிள்ஸ் எடுத்து வெற்றி பெற்றார்கள். இதுபோல் ஆஸ்திரேலியா அணிக்கு நெருக்கடியை சமாளிக்க தெரியும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதல். உலக க்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023:
உலகக்கோப்பை அரையிறுதி
உலகக்கோப்பை அரையிறுதி: நியூசிலாந்து 398 அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023; நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 397 ரன்கள் குவித்தது இந்திய அணி. அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும் விளாசினர்.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி. தென்னாப்ரிக்காவின் 212 ரன்கள் இலக்கை துரத்தி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் போராடி வென்றது. 19 ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளது.
சாதனை
சச்சினின் சாதனையை முறியடித்த கோலி. ஒரு உலக கோப்பை சீசனில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி. விராட் கோலி (2023) – 674* (10 போட்டிகள்) சச்சின் டெண்டுல்கர் (2003) – 673 (11 போட்டிகள்)
வரலாற்று சாதனை படைத்த ‘கிங்’ கோலி!
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் விராட் கோலி. சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் (463 போட்டிகள்) அடித்ததே இதுவரை சாதனையாக இருந்த நிலையில், அதனை 291 போட்டிகளில் முறியடித்துள்ளார் கோலி.

